districts

கருவேல மரங்களால் அடிக்கடி விபத்து

தஞ்சாவூர், ஆக.7-  

     தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, கிழக்கு கடற் கரை சாலை ஓரங்களில், கருவேல மரங்கள் புதர்போல் மண்டி சாலையை ஆக்கிரமித்துள்ளதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படு கிறது. எனவே, கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

   இதுகுறித்து சமூக ஆர்வலர் முடச்சிக்காடு சேக் இப்ராஹிம்சா, தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிற்கு அனுப்பியுள்ள மனுவில், “சேதுபாவாசத்திரம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வேளாங்கண்ணி, நாகூர், திருச்செந்தூர், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    தினசரி இந்த சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இரு ஓரங்களிலும், குறிப்பாக அதி ராம்பட்டினம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வரை கருவேல மரங்கள் கொடி போல படர்ந்து சாலையை மறைத்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், அடிக்கடி விபத்து நிகழ்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்கு, சாலை ஓரமாக செல்லும்போது முள்செடிகள் கண்களை பதம் பார்க்கும் நிலையும் உண்டாகிறது.

   எனவே சாலையின் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.