districts

img

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர், ஜூன் 18-

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமை வகித்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட தனி நபர், இரட்டையர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

    முதல் இடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் என மொத்தம் ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த பெரியம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வீராங்கனைகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கினார்.

     முன்னதாக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்காக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இலச்சினையினை விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர், ஆடசியர் கற்பகம் ஆகியோர் வெளியிட்டு அறிமுகப்படுத்தினர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி குழும செயலாளர் நீல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.