districts

img

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.24-  காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தக் கோரி திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு, காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தார். போராட்டக் குழு நிர்வாகிகள் மிசா மாரிமுத்து, அர்ச்சுனன், சுப்பையா, எம்.ரவி உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனர். சுமார் 2 மணி நேரம் முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.  அந்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்துசாமி வல்லத்தரசு, ஆர்.உமாநாத், விஎன்.சாமிநாதன், என்.சுந்தர்ராஜ் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்போது, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, வைகை, கிருதுமால், குண்டாறு உள்ளிட்ட ஏராளமான சிற்றாறுகள் இணைக்கப்படும். எனவே, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கென ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.