புதுக்கோட்டை, மே 21 -
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது கோனாபட்டு கிராமம். இங்கு பனைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதமாகவும் பனை மரத்தின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் சிறுவர்களுக்கான நுங்கு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தயத்தில் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுடைய 60-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். பந்தயம் தொடங்கும் முன் பனைமரம் வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
போட்டி ஒரு பிரிவுக்கு 30 பேர் வீதம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் போகவர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டி தொடங்கியவுடன் ஆர்வமாக சிறுவர்கள் சாலையில் நுங்கு வண்டிகளை ஓட்டிச் சென்றனர். நுங்கு வண்டி போட்டியை சாலையில் இருபுறங்களிலும் நின்று ஆராவாரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
முதலிடத்தைப் பிடித்த கோனாபட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற சிறுவனுக்கு 6 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயம் இரண்டாவது இடத்தை பிடித்த அரண்மனைபட்டியைச் சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு நான்காயிரம் மதிப்பிலான வெள்ளி நாணயம், மூன்றாவது இடத்தைப் பிடித்த சந்தனவிடுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற சிறுவனுக்கு 2 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயம் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இரண்டாவது போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த நைனாபட்டியைச் சேர்ந்த சுப்புராஜா என்ற சிறுவனுக்கு 6 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயம் இரண்டாவது இடத்தை பிடித்த மாவூரைச் சேர்ந்த யுவராஜ் என்ற சிறுவனுக்கு 4 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி நாணயம் மூன்றாம் இடம் பிடித்த கோனாபட்டை சேர்ந்த முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு 2 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி நாணயம் பரிசுகளாக வழங்கப்பட்டது.