திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 - அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்ட 6 ஆவது மாநாடு திங்கட்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது. மாநாட்டிற்கு அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநாட்டில் தேசிய கொடியை முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் சின்னையன், சங்க கொடியை மாவட்ட துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் ஏற்றினர். அஞ்சலி தீர்மானத்தை மாநில அமைப்புச் செயலாளர் தேவராஜன் வாசித்தார். ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் ஜான்பாஷா வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் நாகராஜன் சமர்ப்பித்தார். அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர் சிறப்புரையாற்றினர். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றையை வழங்க வேண்டும். மேலும் 5ஜி அலைக்கற்றையை உரிய காலத்தில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஓய்வூதியர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி செய்து தர வேண்டும். 1.1.2017 முதல் பென்சன் உயர்வை அரியருடன் வழங்க வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ், மெடிக்கல் பில்களை உடனே வழங்க வேண்டும். சிஜிஎச்எஸ் மருத்துவ திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஐ.ஜான்பாஷா, மாவட்டச் செயலாளராக கே.சின்னையன், மாவட்டப் பொருளாளராக எல்.அன்பழகன் உள்பட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ஜான்பாஷா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.