கும்பகோணம், மே 15 - தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூன் 29 இல் முடிவடைகிறது. இதனையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும், ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
சு.கல்யாணசுந்தரம்:
பொது நல பயணம்
எஸ்.கே.என்று அழைக்கப்படும் சு.கல்யாணசுந்தரம், கும்பகோணம் அருகே உள்ள பம்பபடையூர் கு.சுந்தர்ராஜன்-சு.சுந்தராம்பாள் ஆகியோரின் மகனாவார். இவருக்கு முத்துச்செல்வன், சுந்தரராஜன், ஸ்ரீதரன், சுமதி, சித்தார்த்தன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். சுந்தர.இராமமூர்த்தி என்ற சகோதரர் உள்ளார். 1952-ல் பம்பப்படையூரில் பூமிதான இயக்கத்திற்கு மாநிலத்தின் முன்மாதிரியாய் மாநில முதல்வர் இராஜாஜி மற்றும் காமராஜர், கக்கன் ஜி.கே.மூப்பனார் ஆகியோரை அழைத்து வந்து தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கியவரும், அன்றைய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வள்ளல் கு.சுந்தர்ராச வன்னியருக்கு இரண்டாவது மகனாய் பிறந்த சு.கல்யாணசுந்தரம், தந்தையைப் போலவே தன்னையும் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர். இவரது குடும்பம் அக்காலத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தை சார்ந்த பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வடபாதிமங்கலம் முதலியார், குன்னியூர் சாம்பசிவ அய்யர், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற குடும்பங்களை ஒத்த பாரம்பரியமும், செல்வாக்கும் பெற்ற குடும்பம் ஆகும்.
அரசியல் பயணம் '
தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்று, சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தனது 16-வது வயதில் குடந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1958 -1959-ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பைத் துறந்து அறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தை முன்னெடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்தார். தன்னுடைய பொதுச் சேவையின் காரணமாக எல்லா இடங்களிலும் சு.கல்யாணசுந்தரம் என்கிற அவரின் முழுப்பெயரை விட எஸ்.கே. என்றே அழைக்கப்பட்டார். எஸ்.கே.-வின் இல்லத்திற்குத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் மற்றும் கழக முன்னணி தலைவர்கள் வருகை தந்துள்ளனர். கழக தலைவர் கலைஞர், அவரது இல்லத்திற்கு வந்தபோது எஸ்.கே.-வின் தந்தை சுந்தர்ராஜனிடம் கும்பகோணம் கழக பணிமனை கட்டுவதற்கு கட்சி நிதியினைப் பெற்றுச் சென்றார். ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக 1972-ல் இருந்து 1998 வரை ஐந்து முறை (27 வருடங்கள்) தொடர்ந்து கழக பணியாற்றியவர். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபொழுது, தந்தை பெரியார் இவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை போன்ற அடிப்படை வசதிகள் வேண்டுமென்ற கோரிக்கை தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டது. இதை கவனித்த எஸ்.கே. மக்கள் கோரிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து “தந்தை பெரியார் நகர்” என்று பெயரிட்டார். 1995 முதல் 1998 வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கழக செயலாளராக இருந்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராகவும், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவராகவும், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.