திருச்சிராப்பள்ளி, மார்ச்.25- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணை பொது செயலாளர் ஜான் கென்னடி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட துணைத்தலைவர் சேவியர், மாவட்ட செயலாளர் கலையரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சத்திய நாராயணன் நன்றி கூறினார். இதில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் ஆசிரியர் விரோத போக்கை கைவிட வேண்டும். அசஸ்மெண்ட், அசைன்மெண்ட் என்ற பெயரில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.