திருச்சிராப்பள்ளி, அக்.15 - திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை மேற்கொள்ளப்படும் தொழிற்பிரிவுகள் கம்மியர் மின்னணுவியல் (எலெக்ட்ரானிக் மெக்கானிக்), இயந்திர வேலையாள் (மெசினிஸ்ட்) தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்- 2 ஆண்டுகள். வயது வரம்பு ஏதுமில்லை. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் (டிடிபி-ஓ), பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (மல்டி மீடியா அனிமேஷன் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்), சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்) தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும். வயது வரம்பு ஏதுமில்லை. ஆடை தயாரித்தல். அலங்காரப் பூ தைத்தல் தொழில் நுட்பம் தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும். இத்தொழிற்பயிற்சி நிலையமானது நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிலையமாகும். மேற்கண்ட அனைத்து பிரிவிலும் பயிலும் மாணவிகளுக்கு (என்சிவிடி) தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இன்டன்ஷிப் டிரைனிங் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர். பயிற்சிக் கட்டணம் இல்லை, கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடைகள்-2 செட், விலையில்லா காலணி - ஒரு செட். பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்-30.10.2022. இது தொடர்பாக முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), புள்ளம்பாடி, 9443277592 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அறிந்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.