சென்னை, ஏப். 7 - திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர் களுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது ஹோட்டலில் வேலைபார்க்கும் ஊழியர் கள் 3 பேர், சென்னையிலிருந்து 6 பைகளில், 500 ரூபாய் கட்டுகளாக மொத்தம் 4 கோடி பணத்தை ரயிலில் எடுத்துச் செல்ல முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர். சனிக்கிழமை (ஏப்.6) இரவு சுமார் 8.35 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது எஸ்7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் உரிய ஆவணங்களின்றி கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதை யடுத்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறை யினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மான புரசைவாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பி லான ‘ப்ளூ டைமண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணத்தை தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரன் எடுத்து வரச் சொன்னதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணை யர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி னர். அப்போது, பணத்தை எடுத்துச் சென்றவர்களில் ஒருவரான சதீஷ் பாஜக உறுப்பினர் என்பதும் அவ ரது சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகி யோர் பாஜக கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருப்ப தும் கண்டறியப்பட்டது. மேலும், இந்த ரூ. 4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, நெல்லை பாஜக எம்எல்ஏவும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், நயினார் நாகேந்திரன்ஆதரவாளர் கணேஷ் மணி என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான வேட்டி, சேலைகள், நைட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
நயினார் நாகேந்திரன் மீது சட்ட நடவடிக்கை எடுத்திடுக: சிபிஎம்
சென்னை, ஏப். 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ. ராஜசேகரன், ஜி. செல்வா ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இந்த கடிதத்தை அளித்துள்ளனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் - உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் 4.5 கோடி ரூபாய் பணத்தை சனிக்கிழமையன்று (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயலாகும். தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது, பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஜக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும். நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதேபோன்று பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.