மயிலாடுதுறை, மார்ச் 8 - தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரத்தை உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும் வெளியிடாத எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஜி.வெண்ணிலா, டி.சிம்சன், ப.மாரியப்பன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், மார்க்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி.ரவி, அசோகன், கேசவன், மயிலாடுதுறை நகரச் செயலாளர் டி.துரைக்கண்ணு மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.