திருநெல்வேலி, மே 11-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பறை இசைக் கருவிகளுடன் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது நடத்துனர், மாணவியை அவதூறாக பேசி பறை இசைக் கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நெல்லை போக்கு வரத்து கழக மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெல்லை போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.