செங்கல்பட்டு, நவ.19- தோழர் சங்கரய்யா படத்திறப்பு மற்றும் அமைதி ஊர்வலம் செங்கல்பட்டில் நடை பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும் , மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் தகைசால் தமிழர் தோழர் சங்கரய்யாவின் மறைவையொட்டி அவரது படத்திறப்பு மற்றும் அமைதி ஊர்வலம் செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று (நவ.19) கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு, ராட்டிணங்கிணறு பகுதியில் துவங்கி கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கரய்யாவின் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பி.விஸ்வநாதன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வன், நகர செயலாளர் ச.நரேந்திரன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சூ.க.விடுதலை செழியன், மாவட்ட செயலாளர் கனல்விழி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், சிபிஐ மாவட்ட செயலாளர் எ.ராஜ்குமார், சிபிஐஎம்எல் லிபரேசன் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன், பாட்டாளி வர்க்க சமரனணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் வல்லம் வி.கோபி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் எ.செம்பியன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன், மாவட்ட செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட பலர் பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.