districts

வேப்பந்தட்டை அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், ஏப்.28- வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுலவகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  வருவாய்த் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வேண்டி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.  பின்னர் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அதனருகில் இருந்த குழந்தைகள் மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்த சத்துணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.  பின்னர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்கள் தரமானதாகவும் மற்றும் சரியான அளவில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் சித்ரா மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.