districts

img

கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழு நிலவு விழா தமிழ்நாடு -கேரளா பக்தர்கள் திரண்டனர்

தேனி ,மே 6-

    கூடலூர் அருகே உள்ள கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு  தமிழ்நாடு ,  கேரள பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தினர்.

    தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழ்நாடு -கேரளா  எல்லைப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது..

    இந்த ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை  காலை 6 மணிக்கு தொடங்கியது. ஜீப் வாகனம் மூலமும் , பாதயாத்திரையாகவும்  இரு மாநில ஆண், பெண் பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு அமுதசுரபியின் அவல் பிர சாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கண்ணகி தேவியை வழிபட்டனர். விழாவுக்கு வந்த பக்தர்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தேனி ,இடுக்கி ஆகிய  மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்து தரப்பட்டது.  மாலையில் பூமாரியுடன் விழா நிறைவு பெற்றது.

   சென்னை, காவேரி பட்டினம், பூம்புகார், பாண்டிச் சேரி உட்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். அறக்கட்டளை சார்பில் கோயிலுக்கு அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

  தமிழக அரசு தரப்பில் குடிநீர் மற்றும் மருத்துவ, சித்த மருத்துவ முகாம்கள்,  நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தன.