பொன்னமராவதி, ஜூலை 28 -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அமரகண்டன் குளத்தை அம்ருத் 2.0 திட்ட மூலம் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அமரகண்டான் கிழக்கு கரையில் பொன்னமராவதி அண்ணாநகர் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் படித்துறை இல்லாமல் மேம்படுத்து பணிகள் நடை பெற்று வருகிறது. இதுகுறித்து அந்த மக்கள் சார்பில் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை பொன்னமராவதி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆட்சியர் மெர்சி ரம்யாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரத் தலைவர் மலை.தேவேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் சந்தித்தனர். அப்போது தங்களது படித்துறையை மீண்டும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். படித்துறையை அமைத்து தருவதாக ஆட்சியர் உறுதி யளித்தார்.