districts

கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, ஜூலை 5 - மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவி புரியவும் மற்றும் சுயதொழில் மூலம் வருமானம் பெற வழிவகை செய்திடவும், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திடவும், “மயிலாடுதுறை மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்” அமைக்கப்படவுள்ளது.  மேற்படி கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தினை நல்ல முறையில் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மகளிர் திட்ட அலுவலரை துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை பொருளாளராகவும் கொண்ட குழு அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட உள்ளது.  இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக கிறித்துவ மதத்தை சேர்ந்த ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச் செயலாளர்கள் மற்றும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பொறுப்பிற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்களில் சமூக பணிக்கு எவ்வித புகார்களுக்கும் இடமின்றி ஆர்வமுடன் செயல்படுபவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளும், நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் முழு விபரம், கல்வித்தகுதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை ஜூலை 11 ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3 ஆம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.