திருவாரூர், ஜன.23 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கீழவிடையல் ஊராட்சி கருப்பூர் தெற்கு தெருவில் கடந்த மாதம் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தற்போது வரை மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீர் கழிவு நீராக மாறிய நிலையில், உடனடியாக வடிகால் அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று கருப்பூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்ட அறிவிப்பையடுத்து, வலங்கைமான் வட்டாட்சியர் தலைமையில் கடந்த ஜன.20 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து வாலிபர் சங்க வலங்கைமான் ஒன்றிய தலைவர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் ஒன்றியச் செயலாளர் பா.விஜய் முன்னிலையில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கருப்பூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மழைநீர் கழிவுநீராக தேங்கியுள்ள இடத்தின் உரிமையாளர்கள் அனைவரையும் பிப்ரவரி 3 அன்று நேரில் அழைத்துப் பேசி, தேங்கியுள்ள கழிவு நீரை நிரந்தரமாக வெளியேற்றவும், வடிகால் வசதி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது தேங்கியுள்ள கழிவு நீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.