மயிலாடுதுறை, அக்.30 - தன்னுடைய வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கருதாமல், தனது நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக விளங்கக் கூடிய ஊழியர்களை தன் குடும்பம் போலவே கருதி தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தங்க மோதிரம் அணிவித்து, ரொக்கப் பணம், புத்தாடைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அளித்து ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இளம் தொழிலதிபர் ஒருவர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையார் காத்தான்சாவடி பகுதியில் லக்கிஷா குரூப்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ஏ.கே.சந்துரு. இளம் தொழிலதிபரான இவரின் நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு 500 ரூபாய் நோட்டுகளால் கிரீடம், மாலை ஆகியவற்றை செய்து ஒவ்வொருவரையும் கௌரவித்தார். இந்நிலையில் இந்தாண்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு வகைகள் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை வழங்கினார். இது மட்டுமல்லாமல், தனது வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் ஊழியர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து, அசைவ விருந்தளித்து ஊழியர்களை வியக்க வைத்துள்ளார். பொறையார் காத்தான்சாவடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.