districts

மரம் வேரோடு சாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

பாபநாசம், ஆக.30 - பள்ளியிலிருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவரது மனைவி பத்மா. இவர்களது மூத்த மகள் சுஷ்மிதா (15). கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் மகள் ராஜேஸ்வரி (15).  இவர்கள் இருவரும் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதி கோவில் புனித காபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். செவ்வாயன்று மாலை தஞ்சாவூரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.  இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன், சுஷ்மிதாவும், ராஜேஸ்வரியும் வீட்டிற்குச் செல்வதற்காக பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த பிளேம் ஆப் பாரஸ்ட் மரம் திடீரென வேரோடு சாய்ந்ததில், இரண்டு மாணவிகளும் மரத்தின் இடிபாடுகளில் சிக்கினர்.  இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளை மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சுஷ்மிதா, வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மாணவி சுஷ்மிதா உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் மற்றொரு மாணவி ராஜேஸ்வரி படுகாயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.