districts

img

வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ பிடித்து எரிந்து விபத்து

மயிலாடுதுறை மார்ச் 3- மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகேயுள்ள விசலூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்த லாரி, திருவிடைக்கழி அடுத்துள்ள பெருங்குடி என்ற பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பிகள் உரசியதால் லாரியில் இருந்த வைக்கோல் மீது தீப்பிடித்தது.  வைக்கோலில் பற்றிய தீ மளமளவென லாரியிலும் பரவியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் செந்தில் (43), லாரியை சாலையின் அருகே வயலில் இறக்கி பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் சாலை அருகே இருந்த கூரை வீடுகளில் தீ பரவாமல் தப்பியது.  இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் பேரில், தரங்கம்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால், கூடுதலாக பூம்புகார் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  மேலும் ஜேசிபி இயந்திரம் கொண்டும் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை இறக்குவதற்கு முயற்சித்தும் பயன் இல்லாமல் ஒட்டுமொத்த வைக்கோல் கட்டுகளும் லாரியும் முழுவதுமாக எரிந்து கருகியது. விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.