மயிலாடுதுறை, டிச.15- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் தாய்,தந்தையை இழந்து வயது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வரும் சிறுவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று வீடு கட்டி தந்து புதுமனை புகுவிழா நிகழ்ச்சியையும் நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி பூதனூர் கிராமம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்திரா. இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளையில் வேலைசெய்து வாழ்ந்து வரும் அவரது மகள் தமிழரசி மருமகன் மூர்த்தி மற்றும் பேரன்கள் சதீஷ் (வயது10), தினேஷ் (வயது 8) ஆகியோருடன் மிகவும் மோசமான சேதமடைந்த ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசி மூன்றாவது பிரசவத்தின் போது குழந்தையுடன் இறந்தார். அதன்பிறகு தமிழரசியின் கணவர் தலைமறைவாகி போன நிலையில் இரண்டு பேரன்களை அருகிலுள்ள பூதனூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்துக்கொண்டு தள்ளாடும் வயதில் கடும் சிரமத்துடன் ஓலைக்குடிசையில் வசித்து வந்துள்ளார். மூதாட்டி மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் , 3 ஆம் வகுப்பு படித்து வரும் தினேஷ் ஆகியோரின் வறுமைநிலையையும்,வசிக்க வீடு இல்லாததையும் அறிந்த பொறையாரில் இயங்கி வரும் தி லைஃப் ஆஃப் சில்ட்ரன்ஸ் தொண்டு அமைப்பின் நிறுவனர் பிரபு தனது டிரஸ்ட் மூலம் புதிதாக வீடு கட்டித்தந்துள்ளார். இந்நிலையில் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் ,பூதனூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொண்டு அமைப்பின் நிறுவனர் பிரபு தனது குடும்பத்தினரோடு விழாவில் கலந்துக்கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்து இரு சிறுவர்களும் எந்த சூழலிலும் கல்விக்கற்பதை நிறுத்திவிடக்கூடாது என்று கூறியதோடு அவர்களின் கல்விக்காக தொடர்ந்து உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். தங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரபு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பைலட், சமூக ஆர்வலர் தனூஷ்,கிராம பொறுப்பாளர்கள், கிராமவாசிகளுக்கு மூதாட்டி சந்திரா கண்ணீர் மல்க நன்றி கூறினார்.