districts

img

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தஞ்சாவூரில் 9,057 மாணவர்கள் பயன்

ஆட்சியர் தகவல் தஞ்சாவூர், செப்.3 - தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஆக.9 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது. மாவட்டத்தில் 85 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 9,057 மாணவர்கள், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின்கீழ் பயனடைகின்றனர்” என்றார். இத்திட்டத்தில் பயனடைந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசுக் கல்லூரியில் படித்து வரும் மாணவர் வெற்றிவேல் உள்ளிட்ட மாணவர்கள் இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  தொகுப்பு ரெ.மதியழகன், எம்.காம், பி.எல்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். தஞ்சாவூர் மாவட்டம்.