districts

அரசுப் பேருந்து - கார் மோதல் மணப்பாறை அருகே 5 பேர் பலி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 -

    திருச்சி மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்  கொண்டு ஞாயிறன்று சென்றது. அதேபோன்று திண்டுக்  கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி எதிர் திசையில்,  காரில் 5 பேர் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர்.

    மணப்பாறையை அடுத்து வையம்பட்டி அருகே கல்கொத்தனூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, டயர் வெடித்து எதிர் திசையில் வந்து கொண்டி ருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் கார் முற்றிலும்  நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். கார் எதிர் திசையில் வருவதைக் கண்டு  அரசு பேருந்து ஓட்டுநர், பிரேக் போட்டதால் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து சாலையின் பக்கவாட்டில் விழுந்தது. இதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.  

   உயிரிழந்த 5 பேரின் உடல்களை மணப்பாறை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாய மடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மணப்பாறை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

    இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் சம்பவ  இடத்தில் கிரேன் உதவியுடன் பேருந்தை தூக்கும் பணியில்  ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், எங்கு சென்று வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.