தஞ்சாவூர், பிப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே புதன்கிழமை மாலை அரசுப்பேருந்தும், பால் வேனும் மோதிக்கொண்டு நிகழ்ந்த விபத்தில் பேருந்து, கவிழ்ந்தது, இதில் 32 பேர் காயமடைந்தனர். இராமேஸ்வரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தும், எதிரே கட்டுமாவடி நோக்கி சென்று கொண்டிருந்த பால் வேனும் சேதுபாவாசத்திரம் காவல் சரகம், வல்ல வன்பட்டினம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள வாரியில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அருகில் உள்ள கிராம மக்கள் விரைந்துவந்து பேருந்து கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பேருந்தில் பேர் பயணம் செய்த 32 பேர் காயமடைந்தனர். 6 பேர் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கும், 4 பேர் அறந்தாங்கி மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார்சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.