பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜன.13- புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜெஎப்ஆர்ஓபிஎஸ் (JFROPS), மத்திய அரசு ஊழியர்க ளின் கூட்டமைப்பான என்ஜெசிஏ (NJCA), பாதுகாப்புத் துறை ஊழி யர்களின் கூட்டமைப்பான ஏஐடிஇஎப் (AIDEF)-ன் அறைகூவலை ஏற்று கடந்த ஜன.8 முதல் 11 வரை தொடர் உண்ணாவிரத போராட்டம், திருச்சியில் உள்ள ஹெச்இபிஎப் (HEPF) தொழிற்சாலையில் HAPF எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பாக நடைபெற்றது. ஜன.11,12 தேதிகளில் நடந்த போராட்டத்தில் பொது செயலாளர் இரணியன், உதவி தலைவர் விஜயன் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ஜன.16, 25, 26 தேதிகளில் மது விற்கத் தடை
கரூர், ஜன.13 - திருவள்ளுவர் தினம், வடலூர் இராமலிங்கம் நினைவு நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.16 (செவ்வாய்), ஜன.25 (வியாழன்) மற்றும் ஜன.26 (வெள்ளி) ஆகிய தினங்களில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்3 உரிமம் உள்ள ஹோட்டல்களில், மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்கக் கூடாது. மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் எப்எல்3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
காரில் கடத்திய கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
அறந்தாங்கி, ஜன.13 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ஆய்வாளர் குண சேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாமிக் இப்ராஹிம் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணமேல்குடி அருகே வெள்ளூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள சுமார் 41 கிலோ எடை கொண்ட கஞ்சாவையும், கடத்த லுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மணமேல்குடியைச் சேர்ந்த பிரகாஷ் (34), ஐயப்பன் (25), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் (20) ஆகிய மூன்று பேரை கைது செய்து அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, ஜன.13 - இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நைனார் சித்திக்(43). இவர் காரில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசி யத் தகவலின்பேரில், இவரை கடந்த 2017 டிசம்பர் 11 அன்று போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவரது காரில் இருந்து 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டது. இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி அ.கி.பாபுலால் வியாழக் கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி நைனார் சித்திக்குக்கு 11 ஆண்டு கள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தவறுக்கு வருந்துகிறோம்!
நேற்றைய (13.1.2024) தீக் கதிரில் 11.01.2024 அன் றைய 3 ஆம் பக்கம் பிர சுரமாகியுள்ளது. கோப்பு களை அச்சுக்கு அனுப்பு வதில் ஏற்பட்ட இந்த தவ றுக்கு வருந்துகிறோம். எதிர்காலத்தில் இத்த கைய பிழை நேராமல் கவ னித்துக் கொள்வோம் என உறுதியளிக்கிறோம். - ஆசிரியர்
வர்ணம் ஆயிரம் அகாடமியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
தஞ்சாவூர், ஜன.13- தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்வியோடு கலை கற்போம், கலை வளர்ப்போம் என்ற நோக்கத்தோடு, சென்னையில் இந்நிறுவனம் 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், யோகா போன்ற வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றியடைந்து தமிழ்க் கலையினை வளர்த்து வருகின்றனர். இவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், பல்கலைக்கழக பதிவாளர்(பொ) சி.தியாகராஜன், வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் இயக்குநர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக் கொண்டனர். தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செ.கற்பகம், கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஜன.31-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, ஜன.13 - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் விசா ரணை ஜன.31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த விராலி மலை சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜய பாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஆளுநரிடம் அனுமதி பெற்று இந்த வழக்கை நடத்த வேண்டும் என விஜய பாஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை, வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆளுநரின் அனுமதி தேவையில்லை, சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதி போதும் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கால அவகா சம் வேண்டும் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் எஸ்.ஹேமந்த் கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி கா.பூரண ஜெயஆனந்த் ஜன.31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.