districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி அரசுப் பள்ளிகளுக்கு  200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கல் 

திருச்சிராப்பள்ளி, பிப்.1-  திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நல்ல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே திட்டத்திம் கும்பகோணம் பரஸ்பர ஸகயா நிதி லிமிடெட் மூலமாக, மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ10 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் 200 இருக்கை மற்றும் மேசைகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி, அம்பிகாபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, செந்தண்ணீர்புரம் அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பகவதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காமராஜர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மலை கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 200 எண்ணிக்கையிலான 6 அடி நீளமுள்ள இருக்கை மற்றும் மேசைகளை பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.  இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாநகராட்சி  ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன், இளநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் 32,190 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு: வேளாண் இணை இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால் 32,190 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்தில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.12 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் பருவம் தவறிய மழையால் 32,190 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  காப்பீட்டுக்கு இன்று கடைசி மாவட்டத்தில் 2024-25 ரபி பருவ நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.443 பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி வெள்ளிக்கிழமை (ஜன.31). உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 90 பிரிமியம் செலுத்தி, பிப்.17 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.215 பிரிமியம் செலுத்தி மார்ச் 17 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் 448 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 56,878 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரைவைப் பருவம் டிச.24 அன்று தொடங்கப்பட்டு, ஜன.26 ஆம் தேதி வரை 45,198 டன் அரைவை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜன.15 ஆம் தேதி வரை ரூ.12.32 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை  இளம் நெறிஞர் பணியிடம் விண்ணப்பிக்கலாம் 

தஞ்சாவூர், பிப்.1-  தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட சிறப்புத் திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திட்ட செயலாக்க அலகிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் பணிக்கு காலிப்பணியிடம் உள்ளது.  இதில், பணியாற்றிட கணிணி அறிவியல் /தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு) அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் நெறிஞர் நியமனம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  மேற்படி நியமனத்திற்கு தகுதியுள்ள இளம் நெறிஞருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 05.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்திசெய்து மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தஞ்சாவூர் -613010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை thanjavur.nic.in என்ற இணையதளவழியாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்” என்றார்.

செலக்சன் பள்ளியில் பரிசளிப்பு விழா

அறந்தாங்கி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமம் சார்பாக பள்ளி வளாகத்தில் 24 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.   பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பீர் சேக், வி.ஜி.செந்தில்குமார், வருங்கால தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.