அம்பத்தூர், ஜூலை 29- திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் விஜிபி நகரில் வசிப்பவர் ஜனார்த் தனன்(44). இவர் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். பின்னர் இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஜனார்த்தனன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் தனி ஆளாக வந்த மர்ம நபர், கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.