மயிலாடுதுறை, ஜூலை 18 -
முற்றிலும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பாலத்தை உடனே சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகேயுள்ள குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வேட்டை யாம்பாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகில் தெற்குராஜன் வாய்க்காலிலுள்ள சட்ரஸ் பாலம் (நீரொழுங்கி) வழியாகத்தான் அப்பகுதி மக்கள் அனைத்து விதமான தேவைகளுக்கும் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் அந்தப் பாலமோ சேத மடைந்து மோசமான நிலையில் காணப் படுகிறது. மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு வட்டங்களை இணைக்கும் வகையில் எல்லை பகுதியில் இந்த சட்ரஸ் பாலம் அமைந்துள்ளது. இந் நிலையில், வேட்டையாம்பாடி கிரா மத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மணல்மேடு மற்றும் சீர்காழி, கொண்டல் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக் குச் செல்வதற்கு, ஒவ்வொரு நாளும் மரண பயத்தோடு இந்த சட்ரஸ் பாலத்தை கடந்து சென்று வருகின்ற னர். மேலும் வேட்டையாம்பாடி கிரா மத்தைச் சுற்றி 200 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
விவசாயத் தொழிலுக்கு தேவை யான இடுபொருள்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லவும் இந்த பாலத்தைத் தான் நம்பியுள்ள னர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ராஜன் வாய்க்காலில் கட்டப்பட்ட இந்த பாலம், தற்போது வலுவிழந்து இடிந்து விழத் தொடங்கியுள்ளது.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதகின் ஒரு பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உடைந்ததால், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டு மின்றி, அப்பகுதியில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடு மாறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக் கையாகி விட்டது.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், “சீர்காழி, கொண்டல், மணல்மேடு, குறிச்சி, மயி லாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொது மக்களும் இந்த தெற்குராஜன் வாய்க்கால் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த வழியாக வந்து சாலையை சேதப்படுத்தி விடுகின்றன.
தற்போதுவரை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. மழைக்காலம் தொடங்கிய பின், தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால், சிதிலமடைந்த பாலத்தை கடக்கும் போது தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத் திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரி பாலத்தை சீரமைக்க முயற்சி செய்வதாக கூறுகின்றனர்.
அதற்குள் அந்த அதிகாரி இடமாறுதலில் சென்றுவிட்டால் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார் கள். மழைக்காலத்திற்குள் இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டித் தர வேண்டும். சாலை யோர தடுப்புகள் அமைத்து பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத் துள்ளனர்.