பழநி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு தபால் உறை வெளியீடு
திண்டுக்கல், டிச.15-
புவிசார் குறியீடு பெற்ற பழநி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு தபால் உறை இந்திய அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் தொன்மையான பிரசாதம் என பழநி பஞ்சாமிர்தம் கருதப்படுகிறது. எவ்வித செயற்கை பொருட்களும் சேர்க்கப்படாமல் வாழைப்பழம், நெய், கரும்பு சர்க்கரை, தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தம் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருளாக உள்ளது. இதன் காரணமாக பழநி பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த வரிசையில் பழநி பஞ்சாமிர்தமும் இணைந்துள்ளது. திண்டுக்கல் தபால்துறை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சகாயராஜ், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் பழநி பஞ்சாமிர்தத்திற்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டனர்.