சமூக வலைதளங்களில் இந்துத்துவத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் குமார். இவர் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா பற்றி வரும் செய்திகளை சேகரிந்து அதனை தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் முகநூல் கணக்குகளை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்த பொழுது தொடர்ந்து அவர் ஒரு சார்பாக பதிவு செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷ் குமாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது முகநூல் பக்கத்தை பின்பற்றி வந்த பொதுமக்கள் ஏழு நபர்களை கிராமப்புற துணைக் காவல் கண்காணிப்பாளர் (Rural DSP) அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
அரசுப் பணியில் உள்ளவர்கள் எந்த கட்சிக்கும் எந்த மதத்துக்கும் ஆதரவாக இல்லாமல், நடுநிலையாக செயல்படவேண்டும் என்பது விதி. இதனை மீறி அரசியல் கட்சிகளுக்கோ, மதம் சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ செயல்படும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஒரு சார்பாக செயல்பட்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.