நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை பற்றி பேசும் அடுக்கம் நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சாகித்ய அகாதமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய நாவல் அடுக்கம். அவர் காலமாவதற்கு முன்பே இந்த நாவலை முடித்து தந்துள்ளார். அவரது நூல் வெளியீட்டு விழாவில் அவர் இல்லாத வெளியீட்டு விழா என்றால் அது இது தான். சனியன்று திண்டுக்கல் வி.ஜி.எஸ். மண்டபத்தில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான ச.தமிழ்செல்வன் தலைமை ஏற்று நாவலை வெளியிட்டார்.
முதல் பிரதிநிதியை திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மருத்துவர் கு.இராஜேஷ்வரன், சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொறுப்பு தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய், முனைவர் முருகேசபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளரும் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியருமான ஆனந்தகுமார் நாவலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
நாவல் குறித்து பாலபாரதி பேசும் போது, அடித்தட்டு மக்கள் குறிப்பாக விவசாயிகள் தொழிலாளர்கள் காவலத்துறை, நீதித்துறையால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்த விவரங்களை டி.செல்வராஜ் சிறுகதைகளாக தொகுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஆற்றல் இருந்ததால் தான் தோல் நாவல் வெளிவந்தது.
சாகித்ய அகாதமி விருது பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். அது தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளி ஒவ்வொருவருக்கும் கிடைத்த விருதாக இருந்தது.
அடுக்கம் நாவல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்த வரும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை பற்றிய நாவலாக உள்ளது.
இந்த நாவலும் பல விருதுகளை அள்ளிச்செல்லும் என்பதை ஐயமில்லை என்று பாலபாரதி பேசினார். டி.செல்வராஜ் மகனும் வழக்கறிஞருமான சார்வாகன்பிரபு நன்றி கூறினார்.