திண்டுக்கல், ஜூலை 2- சேலம் மகாத்மா காந்தி உள்விளை யாட்டு அரங்கில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் கடந்த 20,21,22,23 ஆகிய தேதிகளில் நடை பெற்றன. இதில் திண்டுக்கல் தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு டேக்வாண்டோ கிளப் சார்பாக 58 மாணவ - மாணவிகள் உட்பட 27 மாநிலங்களைச் சேர்ந்த 1622 பேர் பங்கேற்றனர். சப் - ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் திண்டுக்கல் கிரீன்பார்க் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர் அப்துல் சமது, திண்டுக்கல் அரசு பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி டாப்சிகா, புனித ஆண்டனி பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவர் கே.பிரனேஷ் எஸ்.எம்.பி.எம். பள்ளி 4ஆம் வகுப்பு மாணவர் தியாகராஜன், காந்திகிராம பல்கலைக்கழக 3 ஆம் ஆண்டு வேளாண்மை பட்டதாரி மாணவி மோனாஸ்ரீ, மகரிஷி வித்யாலயா பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவர் சரவண சிவா ஆகிய 6 பேர் தங்கம் வென்றனர். மேலும் 13 வெள்ளிப்பதக்கம், 21 வெண்கல பதக்கம் என ஒட்டுமொத்தமாக 40 பதக்கங்களை வென்று அசத்தினர் .
பதக்கங்களை வென்றவர்களுக்கு ஞாயிறன்று மகாலிங்க நாடார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. டேக்வாண்டோ கிளப் செயலாளர் எஸ்.ஜோதிபாசு, மாவட்டத்தலைவரும் வழக்கறிஞருமான சார்வாகன் பிரபு, திண்டுக்கல் மாவட்;ட டேக்வாண்டோ சங்க சேர்மன் என்.கமலஹாசன், பயிற்சியாளர்கள் நித்யா, சக்திவேல் ஆகியோர் மாணவ, மாணவியர்களை பாராட்டினர். (நநி)