பாஜக ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துத் துறையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 800 பேருந்துகளில் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இது பற்றி அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க சிஐடியு பொதுச்செயலாளர் ராமநாதன் கூறுகையில்
மோடி அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களும் பங்கேற்கிறார்கள். சிஐடியு எல்.பி.எப் அலுவலக பணியாளர்கள் சங்கம், தொமுச, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஏ.எல்.எல்.எப், திராவிட ஒர்க்கர்ஸ் யூனியன், பணியாளர் சம்மேளனம் ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஓட்டுநர், நடத்துனர், பராமரிப்புப் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள் ஆகிய துறை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல், தேனி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் அதிகாலை முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் தற்போது வேலைநிறுத்தல் பங்கேற்று உள்ளனர். பிற்பகல் ஷிப்டுக்கு வேலைக்குச் செல்பவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் போக்குவரத்து துறையில் ஊழியர்கள் முழுமையான பங்கேற்பு ஏற்படும். காலை 8.30 மணி நிலவரப்படி பழனியில் 6 பேருந்துகளும், ஒட்டன்சத்திரத்தில் 4 பேருந்துகளும், திண்டுக்கல் கிளை 3ல் 18 பேருந்துகளும், வேடசந்தூரில் 2 பேருந்துகளும், திண்டுக்கல் 1 கிளையில் 4 பேருந்துகளும், திண்டுக்கல் 2 கிளையில் 8 பேருந்துகளும், நத்தத்தில் 4 பேருந்துகளும், வத்தலகுண்டில் 8 பேருந்துகளும் என திண்டுக்கல் மாவட்டத்தில் என 54 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் 41 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆக மொத்தம் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் 100 பேருந்துகளே இயக்கப்படுகின்றன. என ராமநாதன் தெரிவித்தார்.