தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் பின்புறம் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஏராளமான மாட்டு வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில், திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், மழையிலும், வெயிலிலும் கிடந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மேலும் வாகனங்களில் உள்ள உதிரிபாகங்கள் திருடு போகும் நிலை உள்ளது. எனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை, பொது ஏலத்தில் விட்டு, அரசுக்கு வருமானம் வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.