குடவாசல், ஜூன் 25 - குடவாசல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணனிடம் கிளை நூலகர், வாசகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் காந்தி பூங்கா பின்புறம் அமைந்துள்ள கிளை நூலகத்தில் இரண்டு கட்டிடம் உள்ளது. இதில் ஒரு கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதால், நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு ஆபத்து என்ற காரணத்தினால் பழுதடைந்த கட்டிடம் தற்சமயம் பூட்டப்பட்டுள்ளது. மேலும் நூலகம் அமைந்துள்ள பகுதியில், 2014 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில், போதிய வசதியின்றி இந்நூலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி குடவாசல் கிளை நூலகர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணனிடம், “நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படிக்க இடப்பற்றாக்குறை இருப்பதாகவும், சதுரங்க பயிற்சிக்கு வரும் மாணவர்கள், கல்லூரிக்கான விண்ணப்ப படிவங்களை கணினியில் பதிவிறக்கம் செய்வதற்காக இந்நூலகத்திற்கு வரும் மாணவர்கள், போதிய வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்” எனக் கோரி, சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.