districts

திருநீலகண்டப் பிள்ளையார் தீர்த்தவாரி திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  கி.பி. 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சரது தீராத நீரிழிவு நோயை தீர்த்து வைத்த பெருமைக்குரியது எனப் போற்றப்படுகிறது திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம். துளசேந்திர மகாராஜா இந்தக் கோவிலுக்கான நிலத்தில் தானமாக எழுதிக் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. சிறிய கூரைக் கொட்டகையில் இருந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு கோவிலையும் அவர் கட்டிக் கொடுத்ததாக அந்த வரலாறு குறிப்பிடுகிறது.  இந்தக் கோயில் தற்போது பலரின் முயற்சியால் சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் இரண்டு பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோயிலாக அமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது.  கோவிலுக்கு வடபுறத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி நீலகண்டப் பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்தப் பிள்ளையாருக்கு “தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார்” என்ற சிறப்பு பெயரும் உள்ளது.  தீர்த்தவாரி திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பேராவூரணியில் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் எளிதில் வந்து செல்ல போக்குவரத்து வசதிகளும் இதர வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.