districts

மீன்பிடித் தடைக் காலம் ஒரு வாரத்தில் தொடங்குகிறது தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.7- இன்னும் ஒரு வார காலத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலை யில், தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மீன்பிடித் தடைக்காலம் 
தஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை பகுதியில், மீன்பிடித் தடை காலம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் வளத்தை காப்பதற்காக மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இது 61 நாள் கடைபிடிக்கப்படுகிறது. தடைக்காலத்தில், மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டத்தில், திரு வாரூர் மாவட்ட எல்லையான தம்பிக் கோட்டை தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை 24 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில், சுமார் 155 க்கும் அதிகமான விசைப்படகுகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடைக் காலத்தில் மீனவர்களின் குடும்பத்தி ற்கு, தடைக்காலத்தில் ரூபாய் 5 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப் படுகிறது. தற்போது மீன்பிடித் தடைக் காலம் தொடங்குவதால், மீன்  வரத்து குறைந்து, கடல் உணவு பொருட்கள் விலை உயரும் எனத் தெரிகிறது.  மீன்பிடி தடை காரணமாக விசைப்படகுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய மீன்பிடி படகுகளான நாட்டுப் படகுகள், பைபர் படகுகள், கடலுக்கு சென்று மீன் பிடிக்கத் தடை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கடன் வழங்க வேண்டும் 
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலா ளரும், விசைப்படகு மீனவர் சங்கத் தலைவருமான மல்லிபட்டினம் தாஜூதீன் கூறுகையில், “தடைக் காலம் என்பது மீனவர்களை பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று. மீன்பிடித் தடைக்காலம் காரணமாக மீன் வளம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து, அறிவியல் பூர்வ மாக ஆய்வு செய்ய வேண்டும். தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்றால், ஒரு சில தினங்கள் மட்டுமே அதிக அளவில் மீன்கள் பிடிபடுகின்றன.  கடந்த 2000ஆம் ஆண்டு அறி விக்கப்பட்ட இந்த மீன்பிடித் தடைக் காலத்தினால் மீனவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடைக்காலத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் என்பதை மாற்றி, தற்போது, ஏப்ரல் 15 முதல் மே 15 வரை ஒரு மாத மும், அதிக மழை, புயல், இயற்கை  சீற்றம் ஏற்படும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரை என ஒரு மாதமும் என, இரண்டு தடவையாக மீன்பிடித் தடைக் காலத்தை அரசு அறிவிக்க வேண்டும். இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்.  கோடைகாலமான மீன்பிடித் தடைக் காலத்தில் படகுகளை செயல் படுத்தாமல் கட்டி வைப்பதால், விசைப்படகுகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இயந்திரங்கள், படகுகளின் மரப்பலகை உள்ளிட்ட பாகங்கள், மீன் வலைகள் வீணா கின்றன.  எனவே, இரண்டு மாதம் கழித்து மீண்டும் படகுகளை இயக்கும்போது இரண்டு லட்சம் ரூபாய் செலவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, அரசு மீன்பிடித் தடைக்காலம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அதனை நடை முறைப்படுத்த வேண்டும்.  மேலும், தடைக் காலம் முடிந்த பின் மீனவர்கள் தங்கள் படகு களை, பழுது நீக்கம் செய்து, செயல்படுத்த ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தில் அரசுடைமை வங்கிகளில் ஓராண்டு தவணையில் கடன் வழங்க வேண்டும்” என்றார்

தடைக்கால நிவாரணம்
சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் கள் சங்க நிர்வாகிகள் பெரி யண்ணன், நாகேந்திரன் கூறுகை யில், “தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அரசு தடைக்கால நிவாரண உதவியை அதிகரித்து வழங்க வேண்டும். அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் என்பது மீன்பிடித் தொழிலாளர்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே, மீன்பிடித் தடை காலத்திற்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.  தற்போது கோடைக் காலமாக இருப்பதால், விவசாயப் பணிகள் முடிவுற்ற நிலையில், மீன்பிடித் தொழிலாளர்கள் வேறு எந்த தொழிலுக்கும் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளனர். எனவே அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்” என்றனர்.

ஏராளமானோர் பாதிப்பு 
மீன்பிடித் தடைக்காலம் கார ணமாக இத்தொழிலைச் சார்ந்துள்ள உணவகம், தேநீர் கடை, வாடகை வாகன ஓட்டுநர்கள், ஐஸ் கட்டி தயாரிப்பாளர், தலைச்சுமை வியா பாரிகள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

-தஞ்சாவூர் எஸ்.ஜகுபர்அலி