தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில், தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்.21 ஆம் தேதி (திங்கள்) உலகத் தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. இலக்கியத் துறையின் தலைவர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா, உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். இதில் வி.ஜி.சந்தோசம் பேசுகையில், “உலகத் தாய்மொழி நாள் விழாவினை ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடும் வகையில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையில் அறக்கட்டளை ஒன்றை நிறுவப்பட்டுள்ளது. வள்ளுவம் தான் இவ்வுலகின் அரிய கருவூலம். அதனை நினைவு கூறும் வகையில், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலையினை நிறுவுதலில் தன்னுடைய பங்களிப்புள்ளது. அதுமட்டுமின்றி இன்றைய தமிழ் இளையோர் பங்கும் அவசியமானது. விரைவில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பாரதியார் சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “அறக்கட்டளை நிறுவுதல் என்பது இந்த உலகம் உள்ளவரை தமிழ்கூறும் நல்லுலகால் பாராட்டப்படும் செயல்பாடு. விரைவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டி விடுதியொன்று உருவாக்கித் தரப்படும்” என்றார். நிறைவாக மொழியியல்துறை உதவிப் பேராசிரியர் கி.பெருமாள் நன்றி கூறினார்.