districts

img

நெல்விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என்பதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

'விவசாயிகள் நெல் விற்பனையை தடுக்கும் வகையிலும், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கண்டன உரையாற்றினார். 

மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் எம்.பழனி அய்யா, எஸ். கோவிந்தராஜ், கே.முனியாண்டி,  விவசாயிகள் சங்க அம்மாபேட்டை ஒன்றியத் தலைவர் கருப்பையன், தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் சௌந்தர்ராஜன், சிபிஎம் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் வடிவேலன், மாநகரக் குழு ராஜன், இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.