districts

கரும்புக் கடன் தள்ளுபடி தொகையை விவசாயிகளுக்கு வரவு வைக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.30 -  அரசு அறிவித்த கரும்புக் கடன் தள்ளுபடி தொகையை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், பேராவூரணி அருகே உள்ள நெல்லையடிக்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கரும்பு விவசாயிகள் சங்கம் ஒன்றிய பொறுப்பாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்,விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி வீ.கருப்பையா ஆகியோர் பேசினர்.  இக்கூட்டத்தில், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளர் சத்தியமூர்த்தி இடைநீக்கத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில், தாமதமின்றி உரிய விசாரணை நடத்தி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடைப் பகுதி சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாரி தங்குதடையில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கிய கரும்பு கடன் தள்ளுபடியை பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.