districts

மகளுக்கு பாலியல் வன்கொடுமை தந்தை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், ஜூன் 3 -  மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உள்பட இருவருக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இக்குழந்தைகள் சிறு வயதாக இருந்தபோது தாய் இறந்துவிட்டார். இதையடுத்து, இரு குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். இதனிடையே 2016 ஆம் ஆண்டு இரு குழந்தைகளையும், இவர்களது தந்தை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, மூத்த மகளை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தனது தங்கையிடம் கூறி அச்சிறுமி அழுதுள்ளார். இதுகுறித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாத்தா முறையிலான 67 வயது உறவினரிடம் தங்கை முறையிட்டார். இதுதொடர்பாக தந்தையிடம் நியாயம் கேட்பது போல தாத்தா கண்டித்துப் பேசி, இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால், அச்சிறுமியை தாத்தா முறையிலான உறவினரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே, அந்த சிறுமி பூப்பெய்திய நிலையில், தந்தை வீட்டுக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர்.

அப்போது, சிறுமியை தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததில், சிறுமி கருவுற்றார். கருவை கலைக்க தந்தை பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் கரு கலையாமல் ஏழு மாதங்கள் கடந்து, அச்சிறுமியின் வயிறு பெரிதாகி விட்டதன் மூலம் இப்பிரச்னை வெளியில் தெரிய வந்தது. தற்போது அச்சிறுமிக்கு வயது 15.  இதுகுறித்து அச்சிறுமியின் சித்தி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து தந்தையையும், தாத்தாவையும் 2020 ஜூலை 1 ஆம் தேதி கைது செய்தனர்.  இதுதொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சசிரேகா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரணை செய்து தந்தைக்கும், தாத்தாவுக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.