districts

img

எஸ்பிஐ வங்கியின் இரவு நேர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரூ.1.78 கோடி கடனுதவி வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 26 - ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற இரவு நேர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 1 கோடியே 78 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சி, ஏனாதிக்கரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாலை நேர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி கிளை முதன்மை மேலாளர் ஆர்.சூரியேந்திரன் தலைமை வகித்தார். இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தஞ்சை மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கடன் உதவிகளையும், நலத்திட்டங்களையும் வழங்கிப் பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், கல்விக்கடன், வியாபாரக் கடன், வீட்டுக் கடன், மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. கடனைப் பெறும் வாடிக்கையாளர்கள், முறையாக திருப்பி செலுத்த வேண்டும். வாராக் கடன் ஏற்பட்டால், வங்கிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. அது பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு சேவை செய்வதில் தடங்கல் ஏற்படும். எனவே, கடன் பெறும் வாடிக்கையாளர்கள் அவற்றை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.  

இன்றைய தினம், தஞ்சை மாவட்டத்திலேயே இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, 78 பேருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.78 லட்சமும், பயிர் கடன் ரூ.10 லட்சமும், 11 மகளிர் குழுக்களுக்கு உள்ளிட்ட பல்வேறு இனங்களாக ரூ.1 கோடியே 78 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறும் வாடிக்கையாளர்களாகிய நீங்களும் வளர்ந்து, வங்கியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்” என்றார்.  சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் கலந்து கொண்டார்.  தொழிலதிபர் க.அன்பழகன், ரெட்கிராஸ் சேர்மன் டாக்டர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, குமரவடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலக, பேராவூரணி கிளை அலுவலக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக, வங்கி கள அலுவலர்கள் செந்தில்குமார், கார்த்திக் ஆகியோர் வங்கியின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். வங்கி அலுவலர் சுமையா மஹ்மூது வரவேற்றார். கள அலுவலர் இளமாறன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் 270 பேருக்கு ஸ்கூல் பேக், அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்புக் கருவி, கம்ப்யூட்டர், மேசை, மின்விசிறி உள்ளிட்ட ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கபாடிப் போட்டி, ஓட்டப்பந்தயம், சிலம்பப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்கள், மாணவர்களுக்கு 600 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.