districts

கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

கும்பகோணம், ஜூலை 30 - கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் தயார் செய்யப்படும் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.  இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூறுகையில்,  “கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.  இந்த காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு சுமார் 3 டன் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகளை அகற்றும் பணியில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தினமும் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை பசுமை உரங்களாக மாற்றும் திட்டம் வகுக்கப்பட்டு, இதற்காக காய்கறி மார்க்கெட் வளாகத்திலேயே உரக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. உரமாக மாற்றும் பணி தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை உரக் கிடங்கில் உள்ள உரக்குழிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நாள்தோறும் கொண்டு வந்து நிரப்பி, அதில் உள்ள தேவையற்ற குப்பைகளை தரம் பிரித்து அகற்றி, காய்கறி கழிவுகளை மட்டும் உரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை உரங்களாக மாற்ற, தேவையான ரசாயனங்களை சேர்த்து அவற்றை முறையாக பராமரித்து வருகின்றனர். இந்த காய்கறி கழிவுகள் சுமார் 45 நாட்களில் முழுவதுமாக மக்கி இயற்கை உரமாக தயாராகிறது. உற்பத்தியாகும் இயற்கை உரங்கள், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இயற்கை உரம் மூலம் மண்ணுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துகள் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து எடுத்து செல்கின்றனர்” என தெரிவித்தார்.