districts

எள் மகசூலை பாதிக்கும் பூச்சிகளை கட்டுபடுத்துவது எப்படி?

சேதுபாவாசத்திரம், மார்ச் 19- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது மாசிப்பட்ட எள் வளர்ச்சி பூக்கும் பருவத்தில் உள்ளது. இப்பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பூச்சிகளைப் பொருத்தமட்டில் மிக முக்கியமானது தண்டுபினைப்பான் மற்றும் காய்பினைப்பான். இவை தண்டுப் பகுதியை ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும், வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இவை களைக் கட்டுப்படுத்த விதைத்த 25, 35 மற்றும்  50-ஆவது நாட்களுக்குப் பிறகு பாசோலோன்  400 மில்லி அல்லது மானோகுரோட்டோபாஸ் 400 மில்லி இதில் ஏதாவது ஒன்றை 200லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர்  பரப்பில் மாலை வேளையில் கைதெளிப் பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடி புழுவும் ஒன்று. இது இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 750 மில்லி  மாலத்தியான் அல்லது 400 மில்லி பென்தி யான் மருந்தை 200லிட்டர் தண்ணீரில் கலந்து  தெளிக்க வேண்டும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடுங்கி அழித்து விட வேண்டும். வேர்அழுகல் நோயைக் கட்டுப்படுத்த விதை விதைக்கும் போதே விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடின் என்ற பூசாணக் கொல்லி மருந்தை ஒரு  கிலோ விதைக்கு நான்கு கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.