districts

img

அதிகாரிகள் அலட்சியம் : பேராவூரணி சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மூட்டைகள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், கடந்த சில நாட்களாக பெய்த  கனமழையால் நெல் மூட்டைகள்  நனைந்து முளைவிட்டு, சேதமடைந்துள்ளது. கூடுதலாக  பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 2021 ஆம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலனவர்கள் வீட்டில் முடங்கியிருந்ததால் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் காரணமாக இலக்கை விஞ்சி சாகுபடி செய்யப்பட்டது. இதனால் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இயல்பான அளவைக்காட்டிலும் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் உள்ள 25க்கும் மேற்ப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பப்படுவது வழக்கம். 

ஆத்தாளூர் வீரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  அண்மையில் பெய்த தொடர் மழைகாரணமாக பாதுகாப்புக்காக மூடி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தார் பாய்கள் கிழிந்து சேதமடைந்ததாலும், முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றதாலும் நெல் மூட்டைகள் நனைந்து  முளை விட்டுள்ளது. 

கோயிலுக்கு சொந்தமான இடம் என்பதால் சாலைவசதி போடப்படாமல், மழைக்காலங்களில் லாரி சென்று மூட்டைகளை ஏற்ற முடியாத நிலை உள்ளது.  இந்த நெல்மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யும் போது அரிசி கருப்பு நிறமாக இருப்பதாகவும், சமையல் செய்யும்போது சாதம் நாற்றமடிப்பதாகவும் புகார்கள் எழுகிறது. 

தொடர்ந்து மழை பெய்யும் சூழல் நிலவுவதால், ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் முழுவதும் சேதமடைவதற்கு முன், மூட்டைகளை அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதோடு, கூடுதலாக  பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.