தஞ்சாவூர், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம் - வேளாகுடி இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடியம் ஊராட்சியில், அரசு நடுநிலைப்பள்ளி வழியாக வேளாகுடி இணைப்புச் சாலை செல்கிறது. இந்தச் சாலையை இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள். விவசாயப் பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை செல்வதற்கு குறுக்கு வழியாகவும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை பல வருடங்களாக பராமரிப்பு செய்யப்படாமலும், செப்பனிடப்படாமலும், பழுதடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இச்சாலை வழியாக விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.