கும்பகோணம், டிச.1- குப்பையில்லா மாநகராட்சியாக கும்பகோணத்திற்கு மூன்று நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், ‘‘கும்பகோணம் மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசின் திடக்கழிவு துறையின் மூலம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நட்சத்திர அந்தஸ்து அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி கும்பகோணம் மாநகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி தரம் பிரித்து சேகரிப்பது முதல் இறுதியாக ரகம் செய்ய வேண்டிய வரை உள்ள பணிகளை சிறந்த முறையில் கையாளப்பட்டு வருகிறது. எனவே கும்பகோணம் மாநகராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக (ஜிஎஃப்சி) மூன்று நட்சத்திர அங்கீகாரம் பெற சுய உறுதிமொழி சான்றிதழ் பெறப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலைத்தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது என சுய உறுதிமொழிச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கும்பகோணம் மாநகராட்சிக்கு (ஜிஎஃப்சி) சான்று மற்றும் (ஓடி எப்) சான்று என சுய உறுதிமொழி சான்று பெறுவதற்கு ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் தங்களது ஆட்சேபணையை 7 நாட்களுக்குள் கும்பகோணம் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.