districts

img

தஞ்சையில் மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு இந்துத்துவ கும்பல் கொலை மிரட்டல்

தஞ்சை அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை இந்துத்துவ கும்பல் கொலை செய்வதாக காவல்துறை முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில், அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தத்தின் மகள் லாவண்யா (வயது 17) பிளஸ் 2 படித்து வந்தார்.  

இந்நிலையில் மாணவி கடந்த 9ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது தந்தை மாணவியை அழைத்து சென்று கடந்த 15-ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

அப்போது மாணவி பள்ளி விடுதி வார்டன் தன்னை அடிக்கடி வேலை செய்யுமாறு தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் பூச்சி மருந்து சாப்பிட்ட விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்து போனார். புகாரின் பேரில் பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை கண்டறிவதற்காகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் அரவிந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்டத் தலைவர் வே.அர்ஜூன், வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் யூ.காதர்உசேன் 

மற்றும் நிர்வாகிகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை சென்றுள்ளனர். 

இந்நிலையில், சம்பவம் நடந்தது சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனம் நடத்தும் பள்ளி என்பதால், அதில் ஆதாயம் தேட இந்துத்துவா  கும்பல் அங்கு வந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்க நிர்வாகி அரவிந்த், வாலிபர் சங்கம் ஆம்பல் துரை.ஏசுராஜா மற்றும் நிர்வாகிகளை பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்திக்க விடாமல் தடுத்ததுடன், அங்கிருந்து வெளியேறுமாறும், கொலை செய்து விடுவதாகவும் காவல்துறை முன்னிலையிலேயே மிரட்டி உள்ளது. 

இதையடுத்து, காவல்துறையினர் இந்துத்துவா கும்பலை கண்டிக்காமல், வாலிபர், மாணவர்கள் சங்க நிர்வாகிகளை சமாதானப் படுத்தி, அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். 

மாணவி இறந்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனம் என்பதால் அங்கு புகுந்து மாணவியின் மதத்தை தொடர்புபடுத்தி, மதமோதல், மதப்பதட்டத்தை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேட இந்துத்துவா கும்பல் முயற்சிப்பதாக தெரிகிறது. 

இந்நிலையில், அங்கு சென்ற மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்துத்துவ கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.