districts

img

கிளாமங்கலம் தீண்டாமைக் கொடுமை: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.7 -  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு இரட்டைக் குவளை முறை, முடி திருத்த மறுப்பு, ஆலய வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் பட்டியல் இன மக்களின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியக் குழு சார்பில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் கே.முனியாண்டி மற்றும் கிளாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.