districts

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தஞ்சாவூர், மார்ச் 29-  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழி லாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வாழ்க்கை புது காலனியை சேர்ந்தவர் சிவசாமி மகன் கணபதி (28). கட்டடத் தொழிலாளி. இவர் 2014, மே 25 அன்று  வாழ்க்கை கிராமத்திலுள்ள ஆற்றில் குளிக்க வந்த 15 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து, கணபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குமாறு, அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.